அகவிலைப்படி உயர்வு வழக்கை விரைவுபடுத்த கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 11,000 பதிவு அஞ்சல்


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: அகவிலைப்படி உயர்வு வழக்கைவிரைவுபடுத்தக் கோரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு அஞ்சல்களை போக்குவரத்து ஓய்வூதியர்கள் அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.கதிரேசன் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.3,050என்பதே குறைந்தபட்ச ஓய்வூதியமாக இருக்கிறது. இவ்வாறு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுகின்றனர். மீதமுள்ள 60 ஆயிரம் பேருக்கு அதிகபட்ச ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஏனெனில் அனைவருக்குமே கடந்த 2015-ம்ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு தமிழக அரசு அகவிலைப்படி உயர்வை வழங்கவில்லை. இது தொடர்பான அரசாணையை ரத்துசெய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக, அண்மையில் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரை சங்க நிர்வாகிகள் சந்தித்து,தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல், அகவிலைப்படி உயர்வை வழங்குமாறு வலியுறுத்தினோம்.

மேலும், அகவிலைப்படி உயர்வுவழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இரு மேல்முறையீட்டு வழக்குகளும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. அவற்றை பட்டியலிடாமல் காலம் தாழ்த்துகின்றனர். எனவே, இந்த வழக்குகளை விரைந்து பட்டியலிட்டு, தீர்ப்பு வழங்க அறிவுறுத்தக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாநிலம் முழுவதும் உள்ள ஓய்வூதியர்கள் பதிவு அஞ்சல் அனுப்பி வருகின்றனர். இதுவரை 11 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட அஞ்சல்களை அனுப்பியுள்ளோம்.

வழக்கு, மேல்முறையீடு எனஅனைத்து இடங்களிலும் ஓய்வூதியர்களுக்கு சாதகமான தீர்ப்பு பெறும்போதும், தொடர்ந்துஅக விலைப்படி உயர்வு வழங்காமல் அரசு வஞ்சித்து வருகிறது. அதேநேரம், எங்களுக்கு மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை. குறைந்த ஓய்வூதியத்தைக் கொண்டு, அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, அகவிலைப்படி உயர்வு, பணப்பலன் ஆகியவற்றை உடனடியாக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

x