என்.ஆர்.காங். - பாஜக ஆட்சியில் புதுச்சேரி பொருளாதாரம் வீழ்ச்சி: ஜி.ராமகிருஷ்ணன் விமர்சனம்


புதுச்சேரி: என். ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆட்சியில் புதுச்சேரி மாநில பொருளாதார வளர்ச்சி என்பது பின்னோக்கி இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் 24-வது மாநில அமைப்பு மாநாடு, நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய 2 நாட்கள் வில்லியனூரில் நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கான வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் ரெட்டியார்பாளையத்தில் உள்ள கட்சியின் மாநில குழு அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். இதில் 55 பேர் கொண்ட மாநாட்டு வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.

குழு தலைவராக நடராஜன், செயலாளராக ராமமூர்த்தி, பொருளாளராக ஞானசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் சீனிவாசன் கொளஞ்சியப்பன் பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்தியா என மாநில குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஜி. ராமகிருஷ்ணன் பேசியது: ''புதுச்சேரி மக்களுக்கான எண்ணற்ற போராட்டங்களை மார்க்சிஸ்ட்டு கட்சி நடத்தி வந்துள்ளது. புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்ற எங்கள் கட்சியின் தொடர்ச்சியான போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மது ஒழிப்புக்கான மாநாடு, மின் கட்டணத்தை எதிர்த்தும், மின் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிடக் கோரியும் மாநில மக்களை திரட்டி போராட்டங்களை மார்க்சிஸ்ட்டு நடத்தி வருகிறது. 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆட்சியில் மாநில பொருளாதார வளர்ச்சி என்பது பின்னோக்கி இருக்கிறது.

வேறு எங்கும் இல்லாத அளவு வேலையின்மையும் புதுச்சேரியில் தான் அதிகமாக உள்ளது. ஆகவே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் புதுச்சேரி மாநில மாநாட்டில் மாநில மக்களின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான மகத்தான போராட்டங்களை திட்டமிடப்பட உள்ளது'' என்றார்.

x