“கல்விக்கான நிதியை சூரியன் கேட்கிறது... தாமரையே எப்போது தர போகிறாய்?” - அன்பில் மகேஸ்


சென்னை: கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், ‘தாமரையே, கல்விக்கான நிதியை சூரியன் கேட்கிறது. எப்போது நீ தரப் போகிறாய்?’ என கவிதை மூலமாக மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

பொது பள்ளிக்கான மாநில மேடை மற்றும் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் வாசகர் வட்டம் சார்பில் கவிஞர் தமிழ் ஒளியின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழா பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமை வகித்து சிறப்பித்தார்.

கவிஞர் தமிழ் ஒளியின் பாடல்களுடன் தொடங்கிய விழாவில், ‘சாதியில்லா தமிழகம் வேண்டும்’ என்பதை வலியுறுத்தி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகளின் கும்மியாட்டம் நடனம் நடைபெற்றது. தொடர்ந்து ‘கவிஞர் தமிழ்ஒளி எனக்குள் கடத்திய செய்தி’ என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: கவிஞர் தமிழ்ஒளியின் கவிதை ஒன்றை நினைத்து பார்க்கிறேன். தாமரை அல்லியைப் பார்த்து கேட்கிறது - ‘உனக்கு ஏன் கதிரவனின் முகத்தை பார்க்க விருப்பம் இல்லையா?’ என்று அவர் கேட்டிருப்பார். கவிஞர் தமிழ் ஒளி இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், ‘தாமரையே, தாமரையே நீ அல்லியைக் கேட்பது இருக்கட்டும். ஒட்டு மொத்தமாக உதயசூரியன் கல்விக்கான நிதியை உன்னிடம் கேட்கிறதே! அதை நீ எப்போது தரப் போகிறாய்?’ என்று தான் அவர் எழுதியிருப்பார்.

கவிஞர் தமிழ்ஒளியை பாரதியாரின் வழித்தோன்றலாக வந்த பாரதிதாசனின் மாணவர் என்றே நாம் சொல்லலாம். அவர் எழுதியிருக்கிற பாடல்களில் இந்த இருவரின் பிரதிபலிப்பையும் நம்மால் உணர முடியும். தமிழ் மொழிக் கல்வி எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தியதில் எங்களுக்கு வழிகாட்டி கவிஞர் தமிழ் ஒளி. இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து 'தமிழ் வாழும் வரை கவிஞர் தமிழ் ஒளி வாழ்வார்' என்ற புத்தகத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட முதல் பிரதியை வழக்கறிஞர் செந்தில்நாதன் பெற்றுக்கொண்டார். பின்னர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வில் பொது பள்ளிக்கான மாநில மேடை தலைவர் ரத்தின சபாபதி, பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பச்சையப்பன் கல்லூரி வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர் முனைவர் ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x