தாய்லாந்துக்கு வேலைக்குச் சென்று மாயமான ஸ்ரீவைகுண்டம் இளைஞர்: மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு 


தாய்லாந்து நாட்டுக்கு சென்று மாயமான ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரைச் சேர்ந்த இளைஞர் முத்துக்குமாரை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி: தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்குச் சென்று மாயமான ஸ்ரீவைகுண்டம் இளைஞர் மீட்கப்பட்டு இன்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (32). இவருக்கு திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ஏஜென்ட்கள் மூலம் முத்துக்குமார் அடிக்கடி வெளிநாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்று வருவது வழக்கம். திருமணத்துக்கு பின்னர் மீண்டும் வெளிநாடு சென்றுவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.

பின்னர் கடந்த ஜூலை 21-ம் தேதி மீண்டும் தாய்லாந்து நாட்டுக்குச் சென்றார். அங்கு பாங்காங் விமான நிலையம் சென்ற முத்துக்குமார், அங்கிருந்து வாட்ஸ் அப் மூலம் தனது மனைவி சுந்தரியிடம் பேசியுள்ளார். விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டு மொபைல் சிம் கார்டு ஒன்றையும் வாங்கியுள்ளார். பின்னர் கார் மூலம் ஹோட்டலுக்கு சென்ற முத்துக்குமார், அதன் பின் எங்கு சென்றார் என தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் முத்துக்குமாரை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது மனைவி சுந்தரி தனது குழந்தையுடன் வந்து மனு அளித்தார். இதையடுத்து முத்துக்குமாரை மீட்பதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் அடிப்படையில் முத்துக்குமார் பல்வேறு பிரச்சினைகளுக்கு பின்னர் தாய்லாந்து நாட்டில் இருந்து மீட்கப்பட்டார்.

இந்நிலையில் மீட்கப்பட்ட முத்துக்குமாரை இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூரில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வந்தார். முத்துக்குமாருக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. முத்துக்குமாரின் தந்தை மற்றும் உறவினர்கள் அவரை வரவேற்றனர். மேலும், அவரது குடும்பத்தினர் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு நன்றி கூறினர். ஏற்கெனவே அங்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் ஆன்லைன் மூலம் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடந்து வந்த நிலையில், முத்துக்குமார் பாஜகவில் இணைந்தார். அப்போது பாஜக மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

5 ஆயிரம் பேர் சிக்கி உள்ளனர்: தொடர்ந்து முத்துக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஆன்லைனில் வந்த விளம்பரத்தை நம்பி நான் தாய்லாந்து நாட்டுக்குச் சென்றேன். அங்கு விஐபி விசா மூலம் சென்றேன். தாய்லாந்து சென்றபின் நான் வீட்டுக்கு போனில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டு தான் இருந்தேன். அதைத் தொடர்ந்து மியான்மர் பகுதிக்கு ஒரு நதியை கடந்து அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற பின்னர் என்னுடைய பாஸ்போர்ட், செல்போன் அனைத்தையும் வாங்கிக் கொண்டனர்.

படிப்புக்கு ஏற்ற வேலை என்று பொய் சொல்லி என்னைப்போல் ஏராளமானோரை அங்கு அழைத்து வந்துள்ளனர். அது ஒரு பெரிய இடம். அங்கு அனைத்தும் இருக்கும். ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அங்கு ஸ்கேம் வேலை கொடுக்கின்றனர். ரஷ்யா, இராக் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் போன் எண்ணைகளை டிக்டாக் மூலம் எடுத்து எங்களிடம் கொடுப்பார்கள். நாங்கள் ஒவ்வொருவரும் 20 பேரிடம் சாட் செய்ய வேண்டும்.

அவர்களை கிரிப்டோ கரன்ஸி மூலம் ரீசார்ஜ் செய்வார்கள். அதில் அவர்களுக்கு கமிஷன் கிடைக்கும். ஆனால், எங்களுக்கு சம்பளம் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் கொடுக்கும் டார்க்கெட்டை முடிக்கவில்லை என்றால் கடுமையான தண்டனைகள் கொடுப்பார்கள். பேட், வயர், இரும்பு போன்ற பொருட்களால் கடுமையாக அடிப்பார்கள். சிலருக்கு எலெக்ட்ரிக் ஷாக்கும் கொடுப்பார்கள்.

என்னைப்போல அந்த பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிக்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். நான் இருந்த இடத்தில் இந்தியர்கள் யாருமில்லை. நான் இருந்த இடத்தைப் போல் அங்கு 21 இடங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். என்னை மீட்டுக் கொண்டு வந்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் ஆகிய இடங்களில் இருந்து வேலை வாய்ப்பு வந்தால் யாரும் நம்பி போக வேண்டாம். அப்படிச் சென்றால் அங்கிருந்து மீண்டு வருவது தெய்வச் செயல்'' என்றார்.

x