கரூர் நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு செப். 25 வரை நீதிமன்ற காவல்


சேகர்

கரூர்: கரூரில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் வாங்கல் காவல் நிலைய விசாரணை முடிந்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சேகரை செப். 25 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கரூர் மாவட்டம் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை சிபிசிஐடி போலீஸார் செப். 2 கரூரில் கைது செய்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

சிபிசிஐடி காவலில் விசாரிக்க செப். 5 கரூர் நீதிமன்றத்தில் சேகர் ஆஜர்படுத்தப்பட்டார். 2 நாள் நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அவரை விசாரித்து செப். 7 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். வாங்கல் வழக்கில் சேகரை கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் செப். 11 ஆஜர்படுத்திய நிலையில் செப். 25 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாங்கல் வழக்கில் காவல் நிலைய விசாரணைக்காக நேற்று முன்தினம் (செப். 18) சேகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் 2 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 2 நாள் விசாரணை முடித்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் சேகரை இன்று (செப். 20) இரவு ஆஜர்படுத்திய நிலையில் செப். 25 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

x