சுயேச்சைகள் ஆட்டம் ஆரம்பம்... சவப்பெட்டியுடன் வேட்புமனு தாக்கலுக்கு வந்த வேட்பாளர்!


42வது முறையாக தேர்தலில் போட்டியிடும் தேர்தல் மன்னன் நூர் முகமது

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக, பிரபல தேர்தல் மன்னன் நூர் முகமது சவப்பெட்டியுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையொட்டி இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

கோவையில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடியிடம், கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளுக்கு மனுத் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் கடந்த பல தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டு வருகிறார். இதுவரை 42 முறை அவர் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல் உட்பட அனைத்துத் தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டு உள்ளார்.

நூர் முமகது எடுத்துவந்த சவப்பெட்டி...

ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்வதும் பல்வேறு வேடங்கள் அணிந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதும் நூர் முகமதுவின் பாணி. அந்த வகையில் இந்த மக்களவை தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கோவை ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார். அப்போது, ’நாட்டில் ஜனநாயகம் செத்துவிட்டது’ என குறிப்பிடும் வகையில் சவப்பெட்டியுடன் மனு தாக்கல் செய்ய வந்திருந்தார் நூர்.

சவப்பெட்டியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுத்த போலீஸார்

ஆட்சியர் அலுவலகத்திற்கு 200 மீட்டருக்கு முன்பாகவே அவரை தடுத்து நிறுத்திய போலீஸார், சவப்பெட்டியுடன் மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். தொடர்ந்து காரில் இருந்து சவப்பெட்டியை இறக்குவதற்கு முன்பே, அதனை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து நூர் முகமதுவை மட்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வருமாறு போலீஸார் அறிவுறுத்தினர். இந்த சம்பவத்தால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

x