அனுமதி பெறாவிட்டால் சிலந்தி ஆறு தடுப்பணை பணியை நிறுத்த வேண்டும்: பசுமை தீர்ப்பாயம்


கோப்புப்படம்

சென்னை: சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டமுறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை கேரள அரசு உறுதிசெய்ய வேண்டும்.அனுமதி பெறப்படாவிட்டால், அதுவரை கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில் சிலந்திஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக,தமிழகத்தின் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கரில் விவசாய பாசனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், தடுப்பணை கட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, ‘தமிழகத்தின் உரிமையை சட்டரீதியாக மட்டுமின்றி, அனைத்து விதத்திலும் நிலைநாட்டுவோம்’ என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தடுப்பணை பணிகளை நிறுத்தி வைக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலினும் கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையே, நாளிதழ்களில் வந்த செய்தி அடிப்படையில் தேசியபசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்துவழக்காக எடுத்து கடந்த 21-ம் தேதி விசாரணை நடத்தியது. தடுப்பணி திட்டப் பணிகள் தொடர்பாக கேரள, தமிழக அரசுகளிடம் விளக்கம் கேட்டிருந்தது.

இந்நிலையில், அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் அமர்வில் இந்த விவகாரம் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அவர்கள் பிறப்பித்த உத்தரவு விவரம்:

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தமிழகம், கேரளா ஆகிய 2 மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரம். எனவே, தேவையான அனைத்து அனுமதிகளும் பெற்ற பிறகே, தடுப்பணை கட்டும்பணி நடைபெறுகிறதா என்பதைகேரள மாநில நீர்வள ஆதாரத்துறை, வனத்துறை ஆகியவை உறுதி செய்ய வேண்டும்.உரியஅனுமதி பெறும் வரை கட்டுமானபணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். அடுத்த விசாரணை ஜூலை23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது

x