கொள்கை பிடிப்பு, தியாக உணர்வுடன் திமுகவுக்கு வரும் இளைஞர்களை வரவேற்கிறேன்: அமைச்சர் துரைமுருகன் பதிவு


சென்னை: மன உறுதி, கொள்கைப் பிடிப்பு, தியாக உணர்வுடன் திமுகவுக்கு வரும் இளைஞர்களை வரவேற்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதியை துணைமுதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை திமுகவில் வலுத்து வருகிறது. ஆனால், முடிவெடுக்க வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மவுனம் காத்து வருகிறார். துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இருக்கும் நிலையில், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று இளைஞரணி நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதியே பேசியிருந்தார்.

அதன்பின் நடந்த, அமைச்சர் எ.வ.வேலு புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தின் பேச்சும்திமுக வட்டாரத்தில் பரபரப்பைஏற்படுத்தியது. அதேநேரம், இளைஞர்கள் வந்தால் வரவேற்பதாக அமைச்சர் துரைமுருகனும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காசென்று வந்ததும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்ததால், இந்த விழா மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இதற்கிடையே, மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக மாலை 5.17 மணிக்கு அமைச்சர் துரைமுருகன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார். அதில் அவர் பேசியதாவது: இன்று நிறைய இளைஞர்கள், படித்தவர்கள் திமுக பக்கம் திரும்பியுள்ளனர். அவர்களை எல்லாம் நான் வரவேற்கிறேன். காரணம் இளைஞர்கள் வந்தால்தான் இந்த கட்சியை நடத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆனால், இளைஞர்கள் இயக்கத்துக்கு வரும்போது, கட்சியில் நிலைக்க மன உறுதி வேண்டும். மன உறுதிஎப்போது வரும் என்றால், நாம்ஏற்றுக் கொண்டுள்ள கொள்கை உண்மையானது. இந்த கொள்கைக்காக உழைக்கலாம், தியாகம் செய்யலாம் என்ற எண்ணம் உங்களுக்கு வரும். ஆகவே கொள்கையின் அடிப்படையில்தான் இந்த இயக்கத்துக்கு நீ்ங்கள் வரவேண்டும்.

இந்த கட்சிக்கு நீண்ட வரலாறுஉண்டு. அந்த வரலாற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். தியாகம் புரிய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ‘‘தன்னால் கட்சிக்கு என்ன லாபம் என்று கருதுகிறவன் கட்சியின் ரத்த நாளத்தை போன்றவன், கட்சியால் எனக்கு என்ன லாபம் என்று எண்ணுபவன் கட்சியில் வளரும் புற்றுநோய்க்கு சமமானவன்’’ என்று கூறியுள்ளார்.

‘மேனாமினுக்கி கட்சியல்ல’- எனவே, வரும் நண்பர்கள் எல்லோரையும் மனமார வரவேற்கிறேன். எங்களுக்குப் பிறகு இந்த கட்சியை நீ்ங்கள்தான் கட்டிக்காக்க வேண்டும். எனவே, கொள்கை, உறுதியோடு, மனதிடத்துடன், தியாகம் எந்த நிலைக்கும் தயார் என்ற நினைத்து, வரலாறுகளை படித்துவிட்டு வாருங்கள். இது மேனாமினுக்கி கட்சியல்ல, அடித்தளத்தில் உள்ள ஏழை எளியவர்கள், பாட்டாளி தோழர்கள், நெசவாளர்கள் இப்படிப்பட்ட சமுதாயத்துக்காக உழைக்கும் கட்சி. அதையும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிலையில்தான், பவளவிழாமற்றும் முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விருது பெற்ற எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசும்போது, ‘‘திமுகவின் வைரவிழா ஆண்டை கொண்டாடவும், எங்களை வழிநடத்தவும் நீங்கள் ஒருவரை அடையாளம் காட்ட வேண்டும். உங்களுக்கும், மேடையில் உள்ள தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம். உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டாமா? பேராசிரியரைவிட பெரிய தலைவர் யாரும் இல்லை. பேராசிரியர் பெரிய மனதுடன் தலைவரை துணை முதல்வராக அன்று ஏற்றுக் கொண்டார். அதேபோல், நாங்களும் ஏற்றுக் கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்’’ என்று கூறியதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது

x