ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்: கடலூர் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் தபால் அனுப்பும் போராட்டம்!


கடலூரில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தினர் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்: தங்களை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி கடலூரில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் இன்று தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று இரண்டாம் கட்ட போராட்டமாக, தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர், ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் ஆகியோருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூரில் மஞ்சக்குப்பத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் இன்று மாவட்ட தலைவர் வேலவன் தலைமைமையில் நிர்வாகிகள் கருணாமூர்த்தி, சீதாராமன், கண்ணன், திருவேங்கடம் ஆகியோர் முன்னிலையில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

இதில் 400-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் 1,600 தபால்களை அனுப்பியதுடன் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமும் எழுப்பினர்.

x