வண்டலூர் ஏரியின் நீர் வரத்து கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை: விவசாயிகள் நல சங்கம் தீர்மானம்


வண்டலூர் மலையிலிருந்து மழை நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதை விவசாயிகளுக்கு வரைபட மூலம் விளக்கப்பட்டது.

வண்டலூர்: வண்டலூர் கிராமம் சிறு விவசாயிகள் நலச்சங்க தலைவர் வ.கோ.இரணியப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், வண்டலூர் கிராம சிறு விவசாயிகள் நலச்சங்கத்தை புனரமைப்பது என்றும், விவசாய நிலத்திற்கு செல்லும் நீர் வழி கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்யும் ரியல் எஸ்டேட் நடவடிக்கையை, தடுத்து நிறுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், வண்டலூர் பெரிய ஏரிக்கு வண்டலூர் மலையில் இருந்து சிற்றேரி வழியாக வரும், மழைநீர் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க, நடவடிக்கை எடுக்கவும், விவசாய உழவு இயந்திரம் டிராக்டர், அறுவடை இயந்திரம், விவசாய இடு பொருள் மற்றும் விவசாய தானியங்கள் கொண்டு வர சாலை வசதி செய்தல் மற்றும் விவசாய நிலங்களின் அருகில் உள்ள சாலைகளை விவசாய பயன்பாடுகள் தொடர்பான உபயோகத்திற்காக தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இக்கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் சொ.இரணியப்பன், துணைத் தலைவர் புகழேந்தி, துணைச் செயலாளர் ராம மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x