புதுப்பொலிவு பெறும் மெரினா நீச்சல் குளம்: ஒரு வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை


சென்னை: சென்னை மாநகராட்சியில் மெரினா நீச்சல் குளம் இன்னும் ஒரு வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பராமரிப்பில் மெரினா மற்றும் பெரியமேடு மை லேடி பூங்கா ஆகிய இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன.

இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு தனியாரிடம் வழங்கப்பட்டு வந்தது. கட்டண அடிப்படையில் பொதுமக்கள் நீச்சல் அடிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். தனியார் முறையாக பராமரிக்கவில்லை, கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர் என புகார்கள் எழுந்தன.

கடந்த ஆண்டு நீச்சல் குள பணியாளரின் கவனக்குறைவால் மை லேடி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் உயிரிழந்தான். அதனைத் தொடர்ந்து, இந்த நீச்சல் குளங்களில் பொதுமக்கள் நீச்சலடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் மெரினாவில் உள்ள நீச்சல் குளம்பராமரிப்பின்றி கிடந்தது. அண்மையில் மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்தும் இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி மெரினாவில் நடைபெற்றது.

அந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை பார்வையிட வந்த நகராட்சி நிர்வாகத் துறைஅமைச்சர் கே.என்.நேரு, மெரினாநீச்சல் குளத்தை பார்வையிட்டார். அதை உடனே சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார். பின்னர் சீரமைப்புபணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது: மெரினா நீச்சல் குளத்தில் சுத்தமான தண்ணீர் தடையின்றி வருவதற்கான ஏற்பாடுகள், நீச்சல் குளம் அதனைச் சுற்றிலும் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள், நீச்சல் பயிற்சிமேற்கொள்வோருக்கான வசதிகள், கழிப்பறை, உடை மாற்றும் அறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் புதிதாக கண்கவர் ஓவியங்கள் மற்றும் சுவர்களுக்கு வர்ணம் பூசுதல், கூடுதல் மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, நீச்சல் குள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள், சிசிடிவி கேமராக்களை நிறுவுவது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு வாரத்தில் நீச்சல் குளம் பயன்பாட்டுக்கு வரும். மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக இயக்கி, பராமரிக்கும் என்று அவர் கூறினார்.

பெரியவர்களுக்கு ரூ.50 கட்டணம்: மெரினா நீச்சல் குளத்தில் காலை 6 முதல் மாலை 6 மணிவரை பொதுமக்களை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பெரியவர்களுக்கு ரூ.50. சிறியவர்களுக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் வழங்குவது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை. பெண்களுக்கான நேரத்தை நிர்ணயிப்பது தொடர்பாக தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x