மமக முற்றுகை போராட்டத்தால் கலவர காட்சியாக மாறிய பள்ளிகொண்டா சுங்கச்சாவடி: 500-க்கும் மேற்பட்டோர் கைது


சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வைக் கண்டித்து, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. | படங்கள்: எம்.முத்துகணேஷ் |

செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடிகளிலும், கடந்தசெப். 1-ம் தேதிமுதல் 25 சுங்கச்சாவடிகளிலும் வாகனத்தின் வகையை பொருத்து ரூ.5 முதல்ரூ.120 வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சுங்கக்கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

அந்த வகையில் செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள சுங்கச்சாவடியிலும் சுங்கக்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, செங்கல்பட்டில் பரனூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மமகதலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மமகவினர் சிலர்அவ்வழியாகச் சென்ற வாகனங்களை திடீரென வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை தடுக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில் மமகநிர்வாகிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளுஏற்பட்டது. மேலும் சுங்கச் சாவடி4, 5, 6 பூத் கண்ணாடிகளை கட்சி நிர்வாகிகள் அடித்து உடைத்தனர்.

மறியலின்போது சுங்கச்சாவடி கண்ணாடிகளை மமகவினர்
அடித்து உடைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு: இதனால் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர். உடனே கட்சி நிர்வாகிகள் போலீஸ் வாகனத்தை மறித்து அவர்களை விடுவிக்கக் கோரி வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது பின்னர் கைது செய்தவர்களை போலீஸார் விடுவித்தனர்.

போராட்டம் காரணமாக சுங்கச்சாவடியின் இருபுறமும் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுங்கச்சாவடி வழியாகச் சென்ற அனைத்து வாகனங்களும் சுங்கவரி வசூலிக்காமல் அனுப்பி வைக்கப்பட்டன. போராட்டம் முடிந்த பிறகு மீண்டும் கட்டணம் வசூலிப்பு தொடங்கியது.

போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர்.

முற்றுகைப் போராட்டம், சுங்கச்சாவடி கண்ணாடி உடைப்பு, போலீஸ் வாகனத்தை சேதப்படுத்தியதற்காக செங்கல்பட்டு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் மதுரை மாவட்டம் கப்பலூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, திருச்சியை அடுத்த துவாக்குடி, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, கோவை கனியூர், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

x