முன்னீர்பள்ளம் அருகே தாமிரபரணி வெள்ளநீர் கால்வாயில் குளித்த 3 பேர் உயிரிழப்பு


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கொக்கந்தான்பாறையைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் (17), ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (17), நிகில் ஆகியோர் ஜோதிபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர்.

நண்பர்களான இவர்கள் உட்பட 6 பேர் முன்னீர்பள்ளம் அருகே வடுபூர்பட்டி பகுதியைச் சேர்ந்த வகுப்பு தோழன் ஒருவரின் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்சிக்கு சென்றனர். பின்னர், ஞாயிற்றுக்கிழமை மாலை அவர்கள் 6 பேரும் முன்னீர்பள்ளம் அருகே மேலதிடியூர் பகுதியில் உள்ள வெள்ளநீர் கால்வாயில் குளித்துள்ளனர்.

இந்த கால்வாயில் நீர் செல்லாத நிலையில், பள்ளமான பகுதியில் தேங்கி நின்ற தண்ணீரில் குளித்துள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற இவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கியுள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேட்டை, சேரன்மகாதேவியில் இருந்து தீயணைப்புப் படையினரும் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் 3 பேர் உடல்களும் மீட்கப்பட்டன.

உடல்களை பிரேப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மூன்னீர்பள்ளம் போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x