சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வேன் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு


தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வேன் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். மலேசியா நாட்டில் இருந்து ஆன்மிகச் சுற்றுலா வந்த 12 பேர் நேற்று ராமேசுவரத்தில் இருந்து திருச்சிக்கு வேனில் புறப்பட்டனர்.

மதுரை ஆனையூரைச் சேர்ந்த கந்தையா (40) வேனை ஓட்டினார். அதேபோல, தஞ்சாவூர் காந்தி நகரில் டீக்கடை நடத்தி வந்த பவுல்டேனியல் (38), அவரது மகள்கள் சூசன் ரெகுமா (10), ஹெலன் சாமா (7), சித்தப்பா மைக்கேல் (63) ஆகியோர் உறவினர் விசேஷத்துக்காக காரில் தேவகோட்டை அருகேயுள்ள ஆண்டாஊரணிக்கு வந்தனர். காரை பவுல் டேனியல் ஓட்டினார்.

தேவகோட்டை அருகே மார்க்கண்டேயன்பட்டி மணிமுத்தாறு பாலத்தில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், வேன் மீது மோதியது. இதில் காரில் இருந்த 4 பேர், வேனில் இருந்த ஓட்டுநர் கந்தையா, செல்லதுரை (26), ரேணுகா (51), சந்திரன் (55), போகஷாசினி (21), குணசுந்தரி (51) உட்பட 10 பேர் என மொத்தம் 14 பேர் காயமடைந்தனர். கிராம மக்கள் அவர்களை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி காரில் பயணித்த பவுல் டேனியல், சூசன்ரெகுமா, ஹெலன்சாமா, மைக்கேல் ஆகியோர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x