பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு உறுதியாக தண்டனை கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்றார். அப்போது, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.1237.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்த அவர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
அதுசமயம் 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய முதல்வர், “சட்டப்பேரவை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்போடு, துணிவோடு பொள்ளாச்சிக்கு வருகை தந்துள்ளேன். தமிழர்களின் பெருமைகளை இழிவுபடுத்துவோருக்கு பதிலடி கொடுக்கும் காலம் வந்துவிட்டது. தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால், சிலர் வாட்ஸ் ஆப் யுனிவர்சிட்டி மூலம் தமிழ்நாடு வளர்ச்சி அடைவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவதூறு பரப்புகின்றனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ கோவை மாவட்ட தென்னை விவசாயிகளின் நலன்களுக்காக 13 அறிவிப்புகளை வெளியிடுகிறேன். 3 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். மேம்பால பணிக்காக அகற்றப்பட்ட உக்கடம் பேருந்து நிலையம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்படும். ஈரோடு மாவட்டத்திற்கு புதிதாக 9 அறிவிப்புகளை வெளியிடுகிறேன். கொடுமணல் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள பொருட்களை காட்சிப்படுத்த ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய 5 அறிவிப்புகளை வெளியிடுகிறேன். நீலகிரி மாவட்டத்திற்கு 4 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். உதகை தவரவியல் பூங்கா உலகத்தரத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”இப்படி ஒரு கோப்பில் கையெழுதிடுகிறேன் என்றால் பல கோடி மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று அர்த்தம். இப்படியான அறிவிப்புகளை அதிமுகவினரால் சொல்ல முடியுமா? பெண்ணைப் பெற்றவர்களை பதற வைத்த பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் நடந்தது அந்த ஆட்சியில் தான். அப்போதே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தேன். அதை நான் மறந்துவிடவில்லை. கோடநாடு கொலை கொள்ளை வழக்கு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, குட்கா, கஞ்சா வழக்கில் அமைச்சரின் பெயர் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த கூட்டணி பிரிந்துவிட்டதாக நாடகம் ஆடுகிறார்கள். நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யாத பிரதமர் மோடியின் உத்தரவாதம் என பக்கம் பக்கமாக விளம்பரம் செய்துவருகிறார்கள். அனைவருக்கும் 15 லட்சம், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என உத்தரவாதம் என்னாச்சு? நாம் தமிழ்நாட்டுக்கு வந்த எந்த திட்டத்தை இதுவரை தடுத்தோம் என்பதை கூறவேண்டும். அண்டப் புளுகு ஆகாசப் புளுகு போல் இது மோடி புளுகு” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
மத்திய அரசில் 314 பணியிடங்கள் காலி... மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி... ஓபிஎஸ் உறுதியால் சின்னம் முடங்குமா?