அப்துல் ரகுமான் ராஜினாமா ஏற்பு: வக்பு வாரியத்தின் அடுத்த தலைவர் யார்?


அப்துல் ரகுமான் | கோப்புப்படம்

சென்னை: வக்பு வாரிய தலைவராக இருந்த அப்துல் ரகுமானின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், அடுத்த தலைவர் யார் என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வக்பு வாரியத்தின் தலைவராக இருந்தவர் எம்.அப்துல் ரகுமான். திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த இவர், கடந்த 2021 ஜூலையில் தலைவராகநியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை பெறாத நிலையில், ஐயுஎம்எல் கட்சிக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது.

மத்திய அரசின் வக்பு வாரியசட்டத் திருத்தம் மற்றும் வக்பு சொத்துகள் தொடர்பான விவகாரங்களில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், வக்பு வாரிய தலைவர், உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமாசெய்வதாக கடந்த ஆகஸ்ட் 19-ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அப்துல் ரகுமான் கடிதம் அனுப்பினார். அக்கடிதம் மீதான நடவடிக்கை நிலுவையில் இருந்தது. இந்நிலையில், அப்துல் ரகுமானின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பிசி,எம்பிசி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் சி.விஜயராஜ்குமார் அறிவித்துள்ளார். இதையடுத்து, வக்பு வாரியத்தின் அடுத்த தலைவர் யார் என்றஎதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தங்கள்கட்சியில் இருந்தவர் பதவியை ராஜினாமா செய்ததால் தங்களுக்கே தலைவர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என்றுஐயுஎம்எல் தரப்பில் முதல்வருக்கு வலியுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர, திமுகவின் மற்றொருகூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியும் இப்பதவியை பெற விரும்புகிறது. அதேநேரம், அமைச்சர் மஸ்தான், முன்னாள் அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் திமுகவிடமே வக்பு வாரிய தலைவர் பதவி இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. அமெரிக்க பயணம் முடிந்து ஸ்டாலின் இன்று சென்னை திரும்பும் நிலையில், விரைவில் வக்பு வாரிய தலைவர் அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

x