மதுரை திமுக கூட்டத்தில் வழங்கிய பிரியாணி சாப்பிட்ட 65 பேருக்கு வாந்தி, மயக்கம்: 36 பேர் மருத்துவமனையில் அனுமதி


விருதுநகர்: மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே வில்லூரில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம்நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2 ஆயிரம் பேருக்குநலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு டப்பாவில் அடைக்கப்பட்ட சிக்கன் பிரியாணியும் வழங்கப்பட்டது.

பிரியாணியை சாப்பிட்ட கள்ளிக்குடி, லாலாபுரம், சத்திரம் உள்ளிட்டபகுதிகளைச் சேர்ந்த 20 சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 65 பேருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர், திருமங்கலம், கள்ளிக்குடி அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் 20 சிறுவர்கள் உட்பட 36 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மருத்துவமனையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் 100-க்கும்மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

முதல்நாள் இரவு தயாரிக்கப்பட்டு டப்பாவில் அடைத்து வைக்கப்பட்டதால் பிரியாணி கெட்டுப்போயிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவோரை மதுரை தெற்குமாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் சந்தித்து நலம் விசாரித்தார். அதோடு, அவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், ‘நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 ஆயிரம் பேருக்கு பிரியாணி பார்சல் வழங்கப்பட்டது. அதில், 36 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருமங்கலம், கள்ளிக்குடியில் சிகிச்சை பெற்றவர்கள் சிகிச்சை முடிந்து சென்றுவிட்டனர்’ என்றார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து தலா ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

அப்போது அவர் கூறும்போது,‘திமுக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கெட்டுப் போன உணவுவழங்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கவனமாக செயல்பட வேண்டும். மது ஒழிப்பு மாநாட்டுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பதில் அளிப்பார். இதுதொடர்பாக சீமான் ஏன் கருத்து கூறுகிறார் என்று தெரியவில்லை.’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x