வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு நீர் திறப்பு


வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்துக்காக திறக்கப்பட்ட நீர்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்துக்காக வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்ட குடிநீர் திட்டங்களுக்காகவும் அங்குள்ள கண்மாய்களில் நீரை தேக்கவும் வைகை அணையில் இருந்து தண்ணீரை திறக்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கடந்த 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 915 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக சிவகங்கை மாவட்டத்துக்காக இன்று அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.

வரும் 19-ம் தேதி வரை மொத்தம் 376 மில்லியன் கனஅடி நீரும், 21-ம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை 6 நாட்களுக்கு மதுரை மாவட்டத்துக்கு 209 மில்லியன் கனஅடி நீரும் திறக்கப்பட உள்ளது. வைகை அணை திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

x