விசிகவின் மது ஒழிப்பு மாநாடு: பாமக நிறுவனர் ராமதாஸ் ரியாக்‌ஷன் என்ன?


விழுப்புரம்: தமிழகத்தின் மற்ற கட்சிகளும் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவது மகிழ்ச்சிதான். இதைப்பற்றி பேச தகுதியான கட்சி பாமகதான். கடந்த 44 ஆண்டுகளாக மதுவிலக்கு வேண்டி பாமக போராடிவருகிறது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி பாசன விவசாயிகள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் கிடைக்கவில்லை. கூட்டுறவுவங்கிக் கணக்கை வருமான வரித்துறை முடக்கி வைத்திருப்பதே இதற்கு காரணமாகும். இதனால் சம்பா சாகுபடிக்கு கடன் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். வருமான வரித்துறையிடம் பேசி இந்த முடக்கத்தை நீக்க தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.

‘தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ என தொடர்ந்து சொல்லி வருகிறோம். முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ரூ.9,540 கோடிக்கு முதலீடு கிடைக்கும் என்று சொல்லிவருகிறார்.

‘ஒரு பைசா கூட வரவில்லை’ என நான் கூறி வருகிறேன். முதல்வரின் ஸ்பெயின் பயணத்தில், தூத்துக்குடி அருகே தளவாடப் பூங்கா அமைக்க ரூ.2,500கோடி முதலீடு செய்வதாக கூறப்படுவது குறித்து உறுதியான திட்டம் இல்லை என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. எனவே தான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத உள் ஒதுக்கீடு செய்ய ஆய்வு செய்து அறிக்கைவெளியிட பிற்படுத்தப்பட்ட ஆணையத்துக்கு அரசு ஆணையிட்டு, இன்றுடன் 20 மாதங்கள் முடிந்துவிட்டது. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை திரட்ட ஆணையம் என்ன செய்யப்போகிறது? வன்னிய மக்களை ஏமாற்ற வேண்டும் என நினைத்தால், அவர்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

கடலூர் மவட்டம், வலசக்காடு நேரடி நெல்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்ய ரூ. 50 ஆயிரம் கையூட்டு கேட்டதால் விவசாயி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மூட்டை ஒன்றுக்கு ரூ.50 கையூட்டுபெறப்படுகிறது. வேளாண் அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்நிலை உள்ளது.

தமிழகத்திற்கு ரூ.573 கோடி கல்வி நிதி ஒதுக்க மத்திய அரசு மறுத்துள்ளதால் மோதல் முற்றுகிறது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்.

பிஎம்சி பள்ளிகளை தமிழகத்தில் திறக்க வேண்டும் என மத்திய அரசு நிபந்தனைகளை விதிப்பதும் அதை தமிழக அரசு மறுப்பதும்தான் இச்சிக்கலுக்கு காரணம்.இதனை சரி செய்ய அமைச்சர் குழுவை டெல்லிக்கு அனுப்பி கல்வி நிதியை வழங்க வலியுறுத்தவேண்டும்.

சீனா பூண்டுகள் உடல்நலத்திற்கு கேடு என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. சீனாவில் பூண்டுகள் பூச்சி மருந்து தெளிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் மருத்துவ நலன்கள் ஏதுமில்லை. இப்பூண்டு ஆபத்தானது. இந்த பூண்டு விற்பனையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், ‘மதவாத கட்சியான பாஜக, சாதியவாத கட்சியான பாமக ஆகிய கட்சிகளுக்கு, தாங்கள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அனுமதி இல்லை’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு மருத்துவர் ராமதாஸ், “தமிழகத்தின் மற்ற கட்சிகளும் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவது மகிழ்ச்சிதான்.

இதைப்பற்றி பேச தகுதியான கட்சி பாமகதான். கடந்த 44 ஆண்டுகளாக மதுவிலக்கு வேண்டி பாமக போராடி வருகிறது. நீண்ட நெடிய போராட்டத்தில் இருக்கிறோம்.

ராஜாஜியும், ஓமந்தூராரும் சென்னை மாகாணத்தில் மதுவிலக்கை கொண்டு வந்தனர். இதை திமுக ரத்து செய்தபோது கொட்டும் மழையில் 94 வயதில் ராஜாஜி, கருணாநிதியின் வீட்டுக்கே சென்று, ‘மது விலக்கை தொடர வேண்டும்’ என்று வலியுறுத்தினார். ஆனாலும் மது விலக்கை ரத்து செய்தனர். இன்றும்திமுகவினர் மது ஆலைகளை நடத்தி வருகின்றனர்.

மது ஒழிப்புக்காக, கடந்த 35 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது. பாமக, மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது. டாஸ்மாக் திறந்த போது 7.200 கடைகளை 4,800 ஆக குறைத்தது பாமகதான். இதற்கான சட்டப்போராட்டங்களை பாமகதான் முன்னெடுத்துச் செய்தது.

காலை 8 மணி முதல் தொடர்ந்து 16 மணி நேரம் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருந்ததை 10 மணி நேரமாக குறைத்தது பாமக. ‘பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது விலக்கு’ என பாமக அறிவித்த பின்பே, மற்ற கட்சிகள் இதை வலியுறுத்த தொடங்கியிருக்கின்றன. மது ஒழிப்புக்கான எங்களது பயணம் எப்போதும் போல தொடரும்” என்று தெரிவித்தார். அப்போது பாமகவின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x