'அனைவரும் பைத்தியமாகி விட்டனர்'... அமைச்சர் உதயநிதி மனைவியின் ஆவேசப் பதிவு!


கணவர் உதயநிதியுடன் கிருத்திகா

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி, தனது சமூக வலைதளத்தில் அனைவரும் கொஞ்சம் பைத்தியமாகிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா. இவர் 'வணக்கம் சென்னை' என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அதன் பின்னர் 'காளி' உள்பட ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் தயாரித்த 'மங்கை' என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கிருத்திகா உதயநிதி தான் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஜாபர் சாதிக் விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை அவர் வெளிநாட்டுக்கு கடத்தி வந்ததாக தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ள நிலையில் இந்த விவகாரம் திமுகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டிஜிபி ஆகியோரை ஜாபர் சாதிக் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டு திமுக இதற்குப் பதில் அளிக்க வேண்டும் என்று பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கிருத்திகா உதயநிதி

இந்த நிலையில் 'மங்கை' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ளதை வைத்து சில சர்ச்சைக்குரிய பதிவுகள் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைப் பார்த்த கிருத்திகா உதயநிதி, அதற்கு பதில் அளிக்கும் விதமாக 'அனைவரும் பைத்தியமாகி விட்டனர்' என்று பதிவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில், " சமூக வலைதளங்களில் மனிதர்களின் நடத்தையால் நான் கவர்ந்திழுக்கப்பட்டேன். ஏனென்றால் அனைவரும் கொஞ்சம் பைத்தியமாகி விட்டனர்'' என்று அவர் பதிவு செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x