மிஸ் பண்ணாதீங்க... இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம்!


வாக்காளர் சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்டவைகளுக்காக விண்ணப்பிக்கலாம்.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த அக்.27-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வழக்கமான திருத்தப் பணிகள் அன்றே தொடங்கின. அன்று முதல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும், நேரில் படிவங்கள் அளித்தும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்

அதன்படி 2024 ஜன.1-ம் தேதி 18 வயது முடியும் வாக்காளர்கள் பெயர் சேர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பலரும் ஆன்லைன் மற்றும் நேரில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். வாக்காளர்கள் வசதிக்காக, கடந்த 4, 5ம் தேதி களில், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் முகாமில், 6,00,112 விண்ணப் பங்கள் பெறப்பட்டன. பெயர் சேர்க்கக்கோரி மட்டும், 4,07,100 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம் சிறப்பு முகாம் (கோப்பு படம்)

இந்நிலையில், இன்றும், நாளையும் (நவ.25,26) தமிழகம் முழுவதும் 31 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் செய்தலுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

அங்கு வாக்காளர் பட்டியலும் வைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் தங்கள் பெயர் அதில் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். ஒருவேளை, பெயர் நீக்கப்பட்டிருந்தால், சேர்ப்பதற்கு விண்ணப்பம் அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

x