பாஜகவில் 200 உறுப்பினர்களை பூத் வாரியாக சேர்த்தால் பரிசு: தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு


சென்னை: நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணி கடந்த 2-ம் தேதி தொடங்கியது. அக்டோபர்15 வரை நடைபெறும் இந்த பணியில், தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, பணிகளை பாஜகவினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக தென் சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் நேற்று இணைய வழியில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கிப் பேசிய அவர், ‘‘வீடு வீடாகச்சென்று மத்திய பாஜக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி, அதிக உறுப்பினர்களை சேர்ப்பது அவசியம். அனைத்து சாதியினர் மட்டுமின்றி, சிறுபான்மையினரையும் சேர்க்க வேண்டும். தென் சென்னை தொகுதியில், பூத் வாரியாக 200-க்கும் மேற்பட்டோரை சேர்ப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும்’’ என்று அறிவித்தார்.

x