ஓட்டுக்கு பணம் குறித்த புகார்... 100 நிமிடங்களில் நடவடிக்கை; சத்யப்பிரதா சாகு உறுதி!


ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி புகார் தெரிவித்தால் அதன்பேரில் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சத்யப்பிரதா சாகு

தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய கோவைக்கு நேற்று வந்திருந்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு செய்தியாளர்களிடம் பேசினார். "தேர்தலில் ஓட்டுப்பதிவு குறையும் ஓட்டுச்சாவடிகளை கண்டறிந்து, தீர்வு காணப்படும். இம்முறை கண்டிப்பாக ஓட்டுப்பதிவு அதிகரிக்கும்.

பணம், டோக்கன், பரிசுப் பொருட்கள் வழங்கினால், 'சி-விஜில்' மொபைல் செயலியில் புகைப்படம் அல்லது வீடியோவாக, பொதுமக்கள் அனுப்பினால், அடுத்த 100 நிமிடங்களில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். வருமானத்துறை, வணிக வரித்துறை, காவல்துறை, சுங்க வரித்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளையும் இணைத்து நடவடிக்கை எடுக்க, இ - எஸ்.எம்.எஸ்., அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்களில் வந்த புகார்கள் குறித்து விசாரித்து, நீதிமன்றம் மூலமாக தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் தேர்தல் செலவை கண்காணிக்க, செலவின கணக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அறிக்கை கொடுப்பார்கள். அதுபோல மக்களும் தகவல் கொடுத்தால், நடவடிக்கை எடுக்கலாம். மாற்றுத் திறனாளிகளுகென, 'சக் ஷம்' என்ற செயலி இருக்கிறது. அவர்களுக்கு என்னென்ன தேவை என அதில் அவர்கள் தெரிவிக்கலாம்.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று ஓட்டுகளை பதிவு செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்களும் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களின் விருப்பத்தை அறிந்து, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பார்கள். 85 வயதுக்கு மேற்பட்டோரின் வீடுகளுக்குச் சென்று, தபால் ஓட்டுப்பதிவு செய்யும்போது, நேர்மையான ஓட்டாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, போலீஸ் அதிகாரிகள் உடன் செல்வார்கள். வீடியோவில் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட வாக்காளரே ஓட்டை பதிவு செய்கிறாரா என்பது உறுதி செய்யப்படும்" என்று அப்போது அவர் கூறினார்.

x