புதுச்சேரி: புதுச்சேரி இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை பிரிவுக்கு (ஐஆர்பிஎன்) கிருமாம்பாக்கம் அருகே உள்ள நரம்பை மீனவ கிராமத்தில், தலைமையகம், குடியிருப்புகள், பயிற்சி மையம் உள்ளிட்டவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2003ம் ஆண்டு சுமார் 96 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்துக்கு, ஆரம்பம் முதலே நரம்பை மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக, அவர்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இருப்பினும், பட்டாலியன் போலீஸார் அந்த இடத்தில் டென்ட் கொட்டகை அமைத்து கண்காணித்து வந்தனர். இது தொடர்பாக, கிராம மக்களிடம் பலக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கடந்த தேர்தல்களில் அனைத்து முக்கிய கட்சிகளும் நரம்பை கிராமத்தில் பட்டாலியன் மையம் வராது என வாக்குறுதி அளித்திருந்தனர்.
இதனிடையே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் குறிப்பிட்ட இடம் சுற்றுலாத் துறைக்கும், உண்டி உறைவிடப் பள்ளி திட்டத்துக்காகவும் ஒதுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மீதமிருந்த இடத்தை நரம்பை கிராம மக்களின் எதிர்க்கால தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், புதுச்சேரி ஐஆர்பிஎன் போலீஸார், அந்த இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டனர். அதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள, துணை கமாண்டன்ட் சுபாஷ், உதவி கமாண்டண்ட் ரிஸ்வா சந்திரன், செந்தில் முருகன், ராஜேஸ் மற்றும் ஐஆர்பிஎன் அதிகாரிகள் இன்று காலை நரம்பை கிராமத்துக்கு வந்தனர்.
இதனையறிந்த, நரம்பை கிராம மக்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் புறக்கணித்தனர். ஊர் முழுவதும் கருப்புக் கொடிகளைக் கட்டி எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஊரின் எல்லைப் பகுதியில் (சுனாமி குடியிருப்பு அருகில்) சாலையில் டென்ட் போட்டு அமர்ந்து கையில் பதாகைகளுடன் மறியல் செய்தனர். அப்போது, போலீஸாருக்கும், மீவன கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த ஏம்பலம் தொகுதி எம்எல்ஏ-வான லட்சுமி காந்தன் நம்பை கிராமத்துக்குச் சென்று, பொதுமக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஐஆர்பிஎன் மையம் அமைக்க எதிரப்பு தெரிவித்து பேசினார். அப்போது எம்எல்ஏ-வுக்கும், ஐஆர்பிஎன் பிரிவு அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி காந்தன் எம்எல்ஏ, முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பிறகு ஐஆர்பிஎன் போலீஸார் ஆய்வு பணிகளை மேற்கொள்ளாமல் அங்கிருந்து திரும்பினர்.
தொடர்ந்து, லட்சுமி காந்தன் எம்எல்ஏ மீனவ மக்களிடம் பேசும்போது, “ஏற்கெனவே இருந்த எம்எல்ஏ-க்கள் நரம்பையில் ஐஆர்பிஎன் தலைமையகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தடுத்த நிறத்தினர். கடந்த பட்ஜெட்டில் கூட, முதல்வர் இங்கு கடல் சார் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அறிவித்தார். சுற்றுலா திட்டம், மீன் வளத்துறையின் மூலமாக வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள இருந்தது. இந்த பிரச்சினை மீண்டும் வராத அளவுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க துணையாக நிற்பேன். இது தொடர்பாக, ஊர் பஞ்சாயத்தார் முதல்வர், உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் லட்சுமி காந்தன் கூறினார்.