ஐபிஎல் போட்டிக்கு செல்வோருக்கு பேருந்தில் இலவச பயணம் இல்லை


சென்னை: ஐபிஎல் போட்டியை காணச் செல்வோருக்கு மாநகர பேருந்தில் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படாது என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஐபிஎல் கிரிக்கெட் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் வரும் 24, 26 தேதிகளில் சென்னை, எம்ஏ சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முந்தைய கிரிக்கெட் போட்டிகளில் சம்பந்தப்பட்ட போட்டிக்கான நுழைவுச்சீட்டு வைத்திருந்தால் அதை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் வரும் 24, 26 தேதிகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு மாநகர பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதியில்லை. எனவே, போட்டிக்கு செல்வோரும் பயணச்சீட்டு பெற்று பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x