சிட்லபாக்கத்தில் 21 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி: ஆளுநர் ரவி நேரில் பார்வையிட்டு வாழ்த்து 


விநாயகர் சிலைகளை பார்வையிட்ட ஆளுநர் ரவி. | படம்: எம். முத்துகணேஷ்

சிட்லபாக்கம்: சிட்லபாக்கத்தில் 21 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் நடைபெற்ற கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

குரோம்பேட்டை, ராதாநகரைச் சேர்ந்தவர் கட்டிடக் கலை நிபுணர் சீனிவாசன். இவர் கடந்த 17 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை கொண்டு ஆண்டு தோறும் கண்காட்சி நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகாலில் 21 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கூடிய விநாயகர் சிலைகள் கண்காட்சியை கடந்த 7-ம் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கண்காட்சியில் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. சிப்பிக்குள் முத்து போல பிள்ளையார் முத்துலிருந்து பிறந்து வருவது போல தத்ரூபமாக இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இருளிலும் மின்னும் ரேடியம் பிள்ளையார் திண்ணையில் படுத்து ஓய்வெடுக்கும் பிள்ளையார் சங்கு பிள்ளையார் என விதவிதமான பிள்ளையார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிள்ளையார் சிலைகள் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஐம்பொன், இரும்பு, கண்ணாடி உள்ளிட்டவற்றால் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த கண்காட்சியை இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் வருகை தந்து பார்வையிட்டார். அப்போது, விநாயகர் கண்காட்சியை ஏற்பாடு செய்த சீனிவாசன் ஒவ்வொரு விநாயகரின் சிறப்பம்சங்கள் குறித்து ஆளுநரிடம் விளக்கினார். இதனைக் கேட்டு வியந்த ஆளுநர், கண்காட்சி மிகவும் சிறப்பாக இருந்ததாகச் சொல்லி சீனிவாசனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

முன்னதாக, ஆளுநர் வருகையையொட்டி சிட்லபாக்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மத்திய இணையமைச்சர் முருகன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோரும் இந்தக் கண்காட்சியை பார்வையிட வரவிருப்பதாக சீனிவாசன் தெரிவித்தார்.

x