தென்காசி: 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ- ஜாக் சார்பில் ஆசிரியர்கள் போராட்டம் 


தென்காசி: 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ- ஜாக் சார்பில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டமும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு டிட்டோ- ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆரோக்கியராசு, சுதர்சன், கனகராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் ஸ்டீபன் சேவியர் ஞானம் வரவேற்று பேசினார்.

சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.

ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமன ஆணை மற்றும் ஊதியம் வழங்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக நிரந்தர தொடர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் ராஜ்குமார், மாநில உயர்மட்ட குழு நிர்வாகி மருதுபாண்டியன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். தென்காசி வட்டார டிட்டோ- ஜாக் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 29, 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது எனவும் முடிவு செய்திருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

x