“ஆண்டுக்கு 7% வரை சுங்கக் கட்டணம் உயர வாய்ப்பு” - அகில இந்திய மோட்டார் காங். தலைவர்


சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 76-வது மகா சபை கூட்டம் மற்றும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா பேசினார். அருகில் மாவட்டத் தலைவர் தனராஜ் உள்ளிட்டோர். | படம்: எஸ். குரு பிரசாத் |

சேலம்: ஆண்டுக்கு 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர வாய்ப்புள்ளது, என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க 76-வது மகா சபைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அளவில் உள்ள 937 சுங்கச்சாவடிகளில் 486 சுங்கச் சாவடிகளும், தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகளும் காலாவதி யானவை. காலாவதியான சுங்கச்சாவடிகளில் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் 2036-ம் ஆண்டு வரை சுங்கக் கட்டணம் வசூல் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் உள்ள லாரிகள் 10 நாட்களுக்கு நிறுத்தி வைத்தால், வட மாநிலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே நியாயமான போராட்டத்தை முன்னெடுக்க லாரி உரிமையாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒத்துழைக்க வேண்டும்.

காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்றாவிட்டாலும் 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்த விஷயத்தில் இனி மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை.

காலாவதியான சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும் என சட்டப்பேரவையில் முதன் முதலில் தீர்மானம் நிறை வேற்றியவர் முதல்வர் ஸ்டாலின். சுங்கச்சாவடிகள் மற்றும் டீசல் விலை நிர்ணய விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் லாரி உரிமையாளர்களுடன் சேர்ந்து செயல்பட்டால் தமிழகம், இந்திய அளவில் முன்மாதிரியான மாநிலமாக திகழும். இவ்வாறு அவர் கூறினார்.

x