“உள்நாட்டு கலாச்சாரம் பாதிக்கப்பட்டால்...” - ஹெச்.ராஜா வார்னிங் கருத்து


கோவை: உள்நாட்டு கலாச்சாரம், உள்ளூர் கலாச்சாரம் பாதிக்கப்பட்டால் அந்நிய நாட்டின் தீயசக்திகள் கையில் தேசம் சென்றுவிடும் என, பாஜக தமிழக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா பேசினார்.

இந்து முன்னணி கோவை வடக்கு சார்பில் துடியலூர் பகுதியில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா பொதுக்கூட்டத்தில் பாஜக தமிழக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா பேசியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 150 விநாயகர் சிலைகள் வந்து சேரவில்லை.

தமிழகத்தில் நடப்பது இந்து விரோத அரசு. பெரியார் மண்ணில் தான் விநாயகர் சிலைகளை செய்துள்ளோம். 1944-ம் ஆண்டில் சேலத்தில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் ஆங்கிலேயர்கள் வெளியேறக் கூடாது என தீர்மானம் போட்டனர்.

ஆங்கிலேயர்கள் வெளியேறி விட்டால் இந்தியர்களால் குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்ற தீர்மானம் அண்ணா, பெரியார் தலைமையில் நிறைவேற்றப் பட்டது. ஆனால் பாஜக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்தியாவில் அணுகுண்டு தயாரித்து நமது திறமையை வெளிப்படுத்தினார்.

உள்நாட்டு கலாச்சாரம், உள்ளூர் கலாச்சாரம் பாதிக்கப் பட்டால் அந்நிய நாட்டின் தீயசக்திகள் கையில் தேசம் சென்றுவிடும். அந்த சூழ்நிலை தான் மேற்கத்திய நாடுகளில் இன்று காணப்படுகின்றது. பிரதமரை வெட்டுவேன் என்று கூறிய அமைச்சர் தா.மோ.அன்பரசனை கைது செய்யாதது ஏன்? தமிழக முதல்வர் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைச்சராக பொறுப்பு வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

x