அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு: பேரவை தலைவர் அப்பாவு செப்.13-ல் ஆஜராக உத்தரவு


சென்னை: சென்னையில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, முன்னாள் முதல்வரான ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், ஆனால் அதையேற்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்து விட்டதாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.

பேரவைத் தலைவரின் இந்த பேச்சு அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி, பேரவைத் தலைவர் மு.அப்பாவுக்கு எதிராக முன்னாள் எம்எல்ஏ-வும், அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளருமான ஆர்.எம்.பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் சம்மன் அனுப்பியும், அதை பேரவைத் தலைவர் தரப்பில் பெற மறுத்து விட்டதாக மனுதாரர் பாபு முருகவேல் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பேரவைத் தலைவர் தரப்பில், நீதிமன்றம் அனுப்பிய சம்மனை நிராகரிக்கவில்லை என்றும், நீதிமன்றம் தெரிவிக்கும் நாளில் ஆஜராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, வழக்கு விசாரணையை செப்.13-க்கு தள்ளிவைத்த நீதிபதி ஜி.ஜெயவேல், அன்றைய தினம் பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுஉள்ளார்.

x