தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்


சென்னை: இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிப்பதுடன், கூட்டுப்பணிக் குழு கூட்டத்தை விரைவில் கூட்டவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த செப்.7-ம் தேதி புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்கள் மற்றும் அவர்களின் 3 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 350 மீனவர்கள் மற்றும் 49 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் இதுவே மிக அதிகமானது. மேலும், இலங்கை நீதிமன்றங்கள் மீனவர்களின் சக்திக்கு மீறிய அபராதங்களை விதித்து வருகின்றன.

இலங்கை அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள், தமிழக மீனவர்கள் அங்கு சிறையில் இருக்கும் காலத்தை நீட்டிக்க வழி செய்வதோடு, ஏற்கெனவே துயரத்தில் உள்ள மீனவக் குடும்பங்களை மேலும் வேதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு மிகப் பெரிய பொருளாதார இழப்புக்கும் வழி வகுக்கும் என்பதை எனது முந்தைய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

எனவே, இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

x