தமிழகத்தில் கனமழை காரணமாக 4,385 ஹெக்டேரில் நீரில் மூழ்கிய பயிர்கள்: பேரிடர் மேலாண்மை துறை தகவல்


சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கடந்த மார்ச் 1 முதல் மே 22-ம் தேதி வரை 12.44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வழக்கமான 12.5 செ.மீ. மழையைவிட 1 சதவீதம் குறைவு.

தமிழகத்தில் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில்13 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 40 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன. கடலூர், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். கடந்த மே 16 முதல் 22-ம் தேதிவரை மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஒரு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட 136 பேர் இன்று காலை வீடுதிரும்பினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 4,385 ஹெக்டேர் பரப்பிலான நெல், சோளம், பருப்பு,எள், கடலை, பருத்தி, கரும்பு ஆகிய பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

கடலோர பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை தகவல்கள்வழங்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

x