தமிழகத்தில் கல்வித் தரம்: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் பொன்முடி பதில்


அமைச்சர் பொன்முடி | கோப்புப் படம்.

விழுப்புரம்: நமது கல்வித்தரம் உயர்ந்துள்ளதற்கு உதாரணம் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் என்று தமிழக பொன்முடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் இன்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தமிழகத்தின் கல்வித்தரம் சரியில்லை என ஆளுநர் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, உயர்கல்வியில் பாடத்திட்டத்தின் தரம் எப்படி இருக்கிறது என மாணவர்களே கூறுகின்றனர் என பதிலளித்தார்.

மேலும், “கல்வியை அறிவியல் ரீதியாக வளர்க்க வேண்டுமென முதல்வர் வெளிநாட்டில் இருந்து கூறியுள்ளார். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைக்கு அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இருமொழிக்கல்வி கொள்கை மூலமாக தமிழகத்தில் கல்வி அறிவு மிகச்சிறப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது. எண்ணிக்கை உயரக்கூடாது, தரம் உயர வேண்டுமென முதல்வர் கூறுவதுபோல், இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே தமிழகத்தின் கல்வித் தரம் உயர்ந்துள்ளது.

அரசு பள்ளியில் படித்த மாணவர் வீரமுத்துவேல்தான், இன்றைக்கு இஸ்ரோவில் இருக்கிறார். அன்றிலிருந்து நமது கல்வித்தரம் உயர்ந்துள்ளது என்பதற்கு உதாரணம். கல்வித்திட்டத்தில் எந்த குறையும் இல்லை. கல்வியை இன்னும் வளர்க்க வேண்டுமென முதலமைச்சர் கூறியுள்ளதால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

x