உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரம்: வாக்கு பெட்டிகளை தயாராக வைக்க உத்தரவு


கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் வகையில், வாக்குப் பெட்டிகளை பழுது நீக்கி தயார்நிலையில் வைக்குமாறு அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்நடத்தப்படுகிறது. அந்த வகையில்கடந்த 2019-ம் ஆண்டு 27 மாவட்டங்களில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வார்டு மறு வரையறை முடிந்த பிறகு, கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பிறகு, மற்ற 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், முதலில் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்திலும், மற்ற 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம்2026-ம் ஆண்டிலும் முடிகிறது. 2026-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலும் வருவதால், முழுமையாக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை முன்னதாகவே முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

ஆய்வு செய்ய வேண்டும்: இதுதொடர்பாக சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஊரக உள்ளாட்சிகளின் சாதாரண தேர்தலுக்கு தேவையான வாக்குப் பெட்டிகள் உட்பட அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார்நிலையில் வைப்பது அவசியம். எனவே, வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று அவற்றின் தரம், நிலையை ஆய்வு செய்ய வேண்டும். வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் சிறிதளவு பழுதடைந்தவை, பயன்படுத்த இயலாத அளவுக்கு முழுமையாக பழுதடைந்தவை என தரம்பிரிக்க வேண்டும். சிறிய பழுதுகளை சரிசெய்ய ஒரு பெட்டிக்கு ரூ.21 வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது. அரசு வழிகாட்டுதலின்படி வாக்குப் பெட்டிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் ஏற்கெனவே கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது

x