Vijay TVK: விக்கிரவாண்டி தவெக மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி!


தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி கிடைத்ததையடுத்து அக்கட்சியினர் விழுப்புரத்தில் திரண்டிருந்தனர்.

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் இம்மாதம் 23-ம் தேதி நடைபெறுவதாகக் கூறப்படும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு விக்கிவாண்டி போலீஸார் 33 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து தவெகவினர் பட்டாசு வெடித்து மகிழச்சியை வெளிப்படுத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் 23ம் தேதி நடத்துவதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரினர். அதைப் பெற்றுக்கொண்ட விக்கிரவாண்டி போலீஸார், 21 கேள்விகளுக்கு பதிலளிக்க காவல்துறை தரப்பில் விஜய் கட்சி நிர்வாகிகளிடம் கடிதம் கொடுத்தனர். காவல் துறையின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த 6ம் தேதி புஸ்ஸி ஆனந்த் பதில் கடிதம் அளித்தார்.

இதையடுத்து விக்கிரவாண்டி போலீஸார், காவல்துறை உயர் அதிகாரிகளுடன், பரிசீலனை செய்த பின், 33 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி கடிதத்தை சீல் வைத்து, விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ். தவெக விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜியிடம் வழங்கினார்.

இதையடுத்து காவல் துறை அனுமதி அளித்தக் கடிதத்தின் 33 நிபந்தனைகள் குறித்து கேட்டபோது, கடிதம் பொதுச் செயலாளர் ஆனந்த்-க்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், முறைப்படி தலைவர் அறிவிப்பார் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மாநாட்டுக்கு அனுமதி கிடைத்ததையடுத்து விழுப்புரத்தில் தவெகவினர், ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு பட்டாசு வெடித்தும் இனிப்பு வெடித்து வழங்கும் கொண்டாடினர். இதனால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே, தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாக பரிசீலித்தது நமது நாட்டின் தேர்தல் ஆணையம்.

தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்டக் கட்சியாக பங்குபெற தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது.

இந்தச் சூழலில் நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநாடுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்” என்று விஜய் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x