மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு: தஞ்சையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!


இன்று காலை ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய ‘தன்னம்பிக்கை பேச்சாளர்’ என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் மகாவிஷ்ணுவை சந்திக்க பத்திரிக்கையாளர்கள் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த நிலையில், பத்திரிக்கையாளர்களைச் சந்திக்க விடாமல், முன்னதாகவே விமான நிலையத்தின் உள்ளேயே சென்று போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணு மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 192, 196 (1) a, 352, 353 (2) மற்றும் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவு 92 (a) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (செப்.7) தஞ்சையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களைச் சந்தித்த போது, அவரிடம், மகாவிஷ்ணு கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்னைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினை வந்தால், உடனடியாக அந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். அந்த பிரச்சினைக்கு என்ன தீர்வோ, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கையை எடுத்துவிட்டேன். அதன்பிறகு, நான் எனது அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவேன். எனவே, அந்த விவகாரம், தற்போது காவல்துறை வசம் சென்றுள்ளது. காவல் துறையினர், அதற்கான நல்ல முடிவை எடுப்பார்கள்” என்றார்.

“என் மீது எந்த தவறும் இல்லை, அமைச்சர் என் மீது பழி சுமத்துகிறார்” என்று மகாவிஷ்ணு கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “இது தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை மகாவிஷ்ணு அவமானப்படுத்திவிட்டதாக கூறி பெரிய புகாரை அளித்துள்ளனர். எனவே இந்த பிரச்சினையை இனி காவல்துறையும், புகார்தாரர்களும் பார்த்துக்கொள்வார்கள். அவர் மீது தவறு உள்ளதா, இல்லையா என்பதில் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்றார்.

x