சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு கட்சித் தொடங்கிய விஜயகாந்த், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வந்தார். இந்நிலையில், விஜயகாந்த்துக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார் விஜயகாந்த். தனது கம்பீரமாக குரல் வளத்தை இழந்த விஜயகாந்த், அண்மை காலமாக அரசியலில் கவனம் செலுத்த முடியவில்லை. அவரது மனைவியும், தேமுதிக பொருளாளருான பிரேமலதாவும், மகன் விஜய் பிரபாகரனும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. தொண்டர்களும் சோர்ந்து போய்விட்டனர். அவ்வப்போது விஜயகாந்த்தை நிர்வாகளிடம் காண்பித்து வருகிறார் பிரேமலதா.
வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த்துக்கு இன்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளதால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்தநிலையில், தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...