“நான் எங்கும் ஓடி ஒளியவில்லை” - ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு விளக்கம்


சென்னை: ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு தலைமறைவானதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, மாணவர்கள் மத்தியில் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ், “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்,” என்று கூறியிருந்தார்.’

மேலும் மகாவிஷ்ணுவுக்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகங்களிலும் போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் மகாவிஷ்ணு.

ஆஸ்திரேலியாவில் இருந்தபடி வீடியோ வெளியிட்டுள்ள அவர், அதில் கூறியிருப்பதாவது: நான் எதற்காக ஓடி ஒளிய வேண்டும். அப்படி ஓடி ஒளியும் அளவுக்கு நான் என்ன தவறாக பேசிவிட்டேன். இன்று மாலை ஒரு செய்தி பார்த்தேன். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் என் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல பரம்பொருள் அலுவலகத்திலும் போலீஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

நான் ஆஸ்திரேலியாவிலேயே தங்கவேண்டும் என்று நினைத்தால் கூட எனக்கு இங்கு 3 வருடம் விசா கொடுத்துள்ளனர். நான் இங்கேயே இருக்க வேண்டும் என்றால் என்னால் எளிமையான 3 மாதங்கள் கூட தங்க முடியும். ஆஸ்திரேலிய அரசும் அதற்கு அனுமதிக்கிறது.

ஆனால் நாளை மதியம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குகிறேன். காரணம் இந்தியாவின் சட்ட திட்டங்களை பெரிதும் மதிப்பவன் நான். அதன் அடிப்படையில், நாளை நான் வருகிறேன். அமைச்சர் அன்பில் மகேஷ் நிறைய பேசியிருந்தார். அவருடைய பேச்சில் கோபமும் சீற்றமும் இருந்ததை பார்க்கமுடிந்தது. அவருக்கு விளக்கம் கொடுக்கும் அளவுக்கு எனக்கு அறிவு, தகுதி இருக்கிறதா எனக்கு தெரியவில்லை. நாளை சென்னை வந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கலாம் என்று இருக்கிறேன்” இவ்வாறு மகாவிஷ்ணு தெரிவித்தார்.

x