சென்னை அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடமாற்றம்: பள்ளிக்கல்வித் துறை அதிரடி


சென்னை: சர்ச்சையில் சிக்கியுள்ள சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சில நாட்களுக்கு முன்னர் தன்னம்பிக்கைப் பேச்சாளராக அறியப்படும் மஹாவிஷ்ணு மாணவிகள் மத்தியில் பேசுகையில் பாவ, புண்ணியம், முன்ஜென்ம பலன்கள் பற்றி பேசினார். மேலும் மாற்றுத்திறனாளியாகப் பிறக்க முன்ஜென்ம பாவ வினைகளே காரணம் என்றும் கூறினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பள்ளியின் ஆசிரியருடன் அவர் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். மாற்றுத்திறனாளியான அந்த ஆசிரியருடன் அவர் வாக்குவாதம் செய்தது இணையவெளியில் கடும் விமர்சனத்தை உருவாக்கியது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மீது இணையத்தில் விமர்சனங்கள் குவிந்தன.

இது குறித்து கருத்து தெரிவித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நிகழ்ச்சிக்கு யார் ஏற்பாடு செய்தது? யாரிடம் அனுமதி பெற்று நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் சங்கர் தனது அறிவுக்கண் கொண்டு அந்த நபரை கேள்வி எழுப்பியதை நான் பாராட்டுகிறேன். அவர் அந்த நபர் மீது புகார் கொடுத்தால் நாங்கள் உறுதுணையாக இருப்போம். ஆனால், ஆசிரியர் சங்கர் மறப்போம், மன்னிப்போம் எனக் கூறியுள்ளார். இருப்பினும் எனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அரசுப் பள்ளிக்குள் வந்து எனது ஆசிரியரை அவமானப்படுத்திய நபரை நான் சும்மா விடப்போவதில்லை” என்று கூறினார்,

இந்நிலையில்தான், சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாதை அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணிக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.

x