அதிமுகவில் இணைந்த தேமுதிக வேட்பாளர்... மகிழ்ச்சியில் இபிஎஸ்; அதிர்ச்சியில் பிரேமலதா!


இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாக்கியராஜ்

தேமுதிக வேட்பாளராக போட்டியிட்டவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளது தேமுதிகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேமலதா

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரு கட்சியில் இருந்து போட்டியிட வாய்ப்பு கேட்டு, வாய்ப்பு மறுக்கப்படுபவர்கள் மற்ற கட்சிகளுக்கு தாவுவது வழக்கம் தான். அதிலும் குறிப்பாக தற்போது பாஜகவில் இருந்து அதிமுகவுக்கும், அதிமுகவிலிருந்து பாஜகவுக்கும் இடம் பெயர்வது அதிகம் நடக்கிறது. இரண்டு கட்சிகளுக்குமான கூட்டணி உறவு முறிந்தபிறகு ஒரு கட்சியிலிருந்து தங்கள் கட்சிக்கு ஆட்களை தூக்குவதை இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு செய்து வருகின்றன.

இத்தகைய அரசியல் சூழலில் எதிர்வரும் மக்களவை பொதுத்தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தேமுதிக கட்சியிலிருந்து எம்எல்ஏ வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஒருவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.

ஈபிஎஸ்

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டவர் பாக்கியராஜ். இவர் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இது தேமுதிகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோன்று அமமுகவின் தேனி வடக்கு ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் வெற்றிவேல், செங்கல்பட்டு மாவட்ட அமமுக எம்.ஜி.ஆர் அணி பொருளாளர் மலர்கண்ணன், மதுரை மாநகர் மாவட்ட அமமுக வர்த்தக அணி செயலாளர் ஷேக் முகமது ஆகியோரும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தலைமையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் தன்னை சந்தித்து ஏராளமானவர்கள் கட்சியில் இணைந்து வருவதால் அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியில் உள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...

திருக்கடையூரில் தினகரன்... 60 வயது நிறைவையொட்டி மனைவியுடன் வழிபாடு!

x