கட்சிகள் தொடங்கப்படுகின்றன, காணாமலும் போய்விடுகின்றன: விஜய் கட்சி குறித்த கேள்விக்கு எ.வ.வேலு கருத்து


மதுரை: தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் செயல்படுகின்றன. சில கட்சிகள் தொடங்கி, காணாமல்போய் இருக்கின்றன. எனவே, நாங்கள் யாரைக் கண்டும் பொறாமை கொள்ளமாட்டோம் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மதுரையில் கட்டப்பட்டு வரும் கோரிப்பாளையம், மேலமடை மேம் பாலங்களின் கட்டுமானப் பணிகளை நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்படும் மேலமடை மேம்பாலப் பணிகள் 30சதவீதமும், கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் 15 சதவீதமும் முடிவுற்றுள்ளன. அதிமுக ஆட்சிக் காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாமல், அவசர கோலத்தில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதால் விபத்துகள் நடக்கின்றன.

அதிமுக ஆட்சியில் விதிகளை மீறி 70 ரயில்வே மேம்பாலங்கள் அவசரகோலத்தில் கட்டப்பட்டன. தற்போது நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள30 ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மதுரை அவனியாபுரம் முதல்நெல்பேட்டை வரையில்மேம்பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக் கப்பட்டுள்ளது. தெற்குவாசல்- வில்லாபுரம் இடையே கூடுதலாக ஒரு மேம்பாலம் அமைக்கப்படும்.

நடிகர் விஜய் கட்சி மற்றும் படத்தை திமுக தடுக்க முயற்சிக்கிறது என்பது தவறான கருத்து. விஜய் கட்சி தொடங்கிய போது, அமைச்சர் உதயநிதி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல. தமிழகத்தில் புதிய கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை. தமிழர்களின் உரிமைக்காக, வாழ்வாதாரத்துக் காக திமுக பாடுபட்டு வருகிறது. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக திமுக தொடங்கப்படவில்லை.

பொறாமை கொள்ள மாட்டோம்: தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் செயல்படுகின்றன. சில கட்சிகள் தொடங்கி, காணாமல்போய் இருக்கின்றன, திமுக பவள விழா கண்ட கட்சி. அதனால், நாங்கள் யாரைக் கண்டும் பொறாமை கொள்ள மாட்டோம். அவர்களைத் தடுக்க மாட்டோம். முடிந்தால் வாழ்த்து சொல்வோம். மக்களின் உரிமைகளுக்காக எந்தகட்சி உறுதுணையாக இருக்கிறது என்பதைப் பொறுத்து, தேர்தலில் மக்கள் ஆதரிக்கிறார்கள். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்

x