விஜய் மாநாட்டுக்கு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை? - தமிழக அரசுக்கு பிரேமலதா கேள்வி


மதுரை: நடிகர் விஜய் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில், தமிழக அரசுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கேள்வி எழுப்பினார்.

மதுரையில் நேற்று கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் பங்கேற்கவந்த பிரேமலதா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்காவில் முதல்வர் சைக்கிள் ஓட்டுகிறார், பாடுகிறார், சிலைகளின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். ஆனால், எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கப் போகிறார்? ஏற்கெனவே பல நாடுகளுக்குச் சென்றபோது எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தனர், இளைஞர்களுக்கு எவ்வளவுவேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது?

மேகேதாட்டுவில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கு எந்தப் பலனுமில்லை. அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகும். அதற்கு மாற்றாக, தமிழ்நாட்டிலேயே அணை கட்ட திட்டமிட வேண்டும். பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. திரைப்படத் துறையில் மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் பாலியல்துன்புறுத்தல் நடக்கிறது. பெண்கள்தைரியமாக இருக்க வேண்டும். நான் அவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன்.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்குஅனுமதி தருவதில் தமிழக அரசுக்குஎன்ன பிரச்சினை இருக்கிறது? ஜனநாயக நாட்டில் கட்சி நடத்தஎல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? யார் வளர்ச்சியையும், யாராலும் தடுக்க முடியாது. கார் பந்தயத்துக்காக ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெறமுடிகிறது. ரூ.5,000 கோடி செலவு செய்து, கார் பந்தயம் நடத்துவதால் யாருக்கு பலன்? அந்தப் பணத்தைவைத்து, தமிழ்நாடு முழுவதும் தரமான சாலைகளை அமைத்திருக்கலாமே? மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு பிரேமலதா கூறினார்

x