திருக்கடையூரில் தினகரன்... 60 வயது நிறைவையொட்டி மனைவியுடன் வழிபாடு!


திருக்கடையூர் கோயிலில் மனைவியுடன் தினகரன்

60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி‌.தினகரன் மனைவி அனுராதாவுடன் வந்து வழிபட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்

திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளையும் உள்ளடக்கியது.

அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம். வருடம் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும்.

தினகரன்

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் கோயிலுக்கு இன்று காலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனக்கு 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து மனைவி அனுராதாவுடன் வருகை வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கோபூஜை, கஜ பூஜை செய்த பின்னர் கோயிலுக்குள்ளே சென்று கள்ள வாரண விநாயகர், ஸ்ரீ காலசம்கார மூர்த்தி, ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் சன்னதிகளில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "60 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்பாளின் அருளைப் பெறுவதற்காக வந்துள்ளோம். ஏற்கெனவே எங்களுக்கு குக்கர் சின்னம் உள்ளது. வதந்திகள், பொய் செய்திகள் மற்றும் யூகங்களை வைத்து கேள்விகள் கேட்காதீர்கள். கொஞ்சநாள் பொறுத்திருங்கள். உங்களது கேள்விகளுக்கு உறுதியான விடை கிடைக்கும்.

நானும் ஓபிஎஸ்சும் வருங்காலத்தில் அரசியலில் இணைந்து செயல்படுவோம் என ஏற்கெனவே முடிவு எடுத்துள்ளோம். கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருப்பது உண்மை கூட்டணி குறித்த இறுதி வடிவம் எட்டிய பிறகு உங்களிடம் தெரிவிக்கிறோம்" என்று சொன்னார்.

x