புதுச்சேரியில் 150 இடங்களில் விநாயகர்  சிலைகள் நிறுவ ஏற்பாடு: 11-ம் தேதி விஜர்சன ஊர்வலம் 


புதுச்சேரி: விநாயகர் சதுர்த்திக்காக புதுச்சேரியில் 150 இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ விநாயகர் சதுர்த்தி பேரவை ஏற்பாடு செய்துள்ளது. வரும் 11-ம் தேதி விஜர்சன ஊர்வலம் நடக்கிறது.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் புதுவையில் விநாயகர் சதுர்த்தி பேரவை சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டு புதுவையில் 150 இடங்களில் 3 அடி முதல் 12 அடி வரை விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய விழா பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். புதுச்சேரி நகர் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் வரும் 11-ம் தேதி கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது.

x