பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி - ம.பி, சத்தீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு!


பாஜக காங்கிரஸ்

மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நாளை நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரமில் கடந்த 7-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் கடும் போட்டி நடக்கிறது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

மோடி - ராகுல்

இந்நிலையில், நாளை அங்கு தேர்தல் நடக்கிறது. மொத்தம் 5.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.

தேர்தலை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாவோயிஸ்ட் பாதிப்பு அதிகம் உள்ள 20 தொகுதிகளில் முதல் கட்டமாக கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மீதியுள்ள 70 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக நாளை தேர்தல் நடக்கிறது. மத்திய பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பாஜக - காங்கிரஸ் கட்சிக் கொடிகள்

முதல்கட்ட தேர்தல் கடந்த 7-ம் தேதி நடந்தபோது, சில இடங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட சிலர் காயமடைந்தனர். நாளை நடக்கும் தேர்தலில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தேவையான வாக்குப் பதிவுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டு இன்று மாலை அவர்கள் தங்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று தேர்தல் ஏற்பாடுகளை கவனித்தனர். 5 மாநில தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

x