திடக்கழிவு மேலாண்மை திட்ட நடவடிக்கைகள் குறித்து கர்நாடக துணை முதல்வர் தலைமையிலான அதிகாரிகள் குழு சென்னையில் ஆய்வு


சென்னை சேத்துப்பட்டில் உள்ள மாநகராட்சியின் ஈரக் கழிவுகளிலிருந்து இயற்கை உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையத்தை கர்நாடக துணை முதல்வர் டி.கே .சிவக்குமார் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

சென்னை: சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று சென்னை வந்தனர்.

முதலில், ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள உர்பேசர் சுமீத் நிறுவனகண்காணிப்பு அறையில் திடக்கழிவுமேலாண்மை தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பார்வையிட்டனர்.

அதன்பின், அண்ணாநகர் மண்டலம், சேத்துப்பட்டில் உள்ள ஈரக்கழிவுகளில் இருந்து இயற்கை உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையம், மாதவரத்தில் உள்ளஇயற்கை உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இந்த நிகழ்வுகளில், கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர்உமாசங்கர், பெங்களூரு மாநகர ஆணையர் துஷார் கிரிநாத், துணைமுதல்வரின் செயலர் ராஜேந்திரசோழன், சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) வி.ஜெயசந்திர பானு ரெட்டி, மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அதன்பின் ரிப்பன் மாளிகையில், சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை குறித்த காட்சிப்படம் திரையிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கூறியதாவது: சென்னையில் மேற்கொள்ளப் பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளைப் பார்வையிட 50 அரசு அதிகாரிகள் கொண்ட குழுவினருடன் வந்துள்ளேன். திடக்கழிவுகள் உருவாகும் வழிகள், அதிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிப்பு குறித்தும் அறிந்து கொண்டோம். இந்த ஆய்வுப் பணிகளுக்காக கடந்த ஓராண்டுக்கு முன்பே வர திட்டமிட்டிருந்தேன். இப்போதுதான் வர முடிந்தது. தமிழக அரசின் சிறப்பான பணி களுக்கு பாராட்டுக்கள்.

முன்னோடி திட்டம்: இதர மாநிலங்களுக்கும் இந்தத்திட்டம் முன்னோடியாகும். தமிழகஅரசிடமிருந்து நாங்களும் பல்வேறுவிஷயங்களைக் கற்றுக்கொண் டோம். இவற்றை நாங்களும் பின்பற்றி எங்கள் மாநிலத்தில் திடக்கழிவு மற்றும் தூய்மைப் பணிகளை மேம்படுத்துவோம்.

திடக்கழிவுகளை முறையாகக் கையாண்டால் அதிலிருந்து மின்சாரம், இயற்கை எரிவாயு போன்ற பயனுள்ள பொருட்களை தயாரிக்கலாம். திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு சென்னை மாநகரம் முன்மாதிரியாக விளங்குகிறது. அந்த வகையில் சென்னை மாநகரை நாங்களும் பின்பற்றுவோம். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

x