3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்


சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் தேசிய இந்தி கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

சென்னை: உலகளவில் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது என்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி வருவதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

தமிழ்நாடு ஹிந்தி சாகித்ய அகாடமி, சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஸ்ணவா கல்லூரி சார்பில் தேசிய கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவை தொடங்கி வைத்துதமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தமிழ்மொழி மிகவும் பழமையான மொழி. பழமையும் சிறப்பும் வாய்ந்த தமிழ் மொழியை உலக அளவில் கொண்டுசெல்ல பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க ஏற்பாடு செய்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. இந்தியாவை ஒரு பொருட்டாக எண்ணாத நாடுகள் தற்போது இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன.

பொருளாதார ரீதியாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி வருகிறோம். இதனால் உலகின் 3-வது பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. முன்பு வெறும் 300, 400 என்ற அளவில் இருந்த ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்து 25 ஆயிரம் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதில் 20 சதவீத தொழில் நிறுவனங்கள் யூனிகார்ன் நிறுவனங்கள். அதாவது, ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மூதலீடுகள் கொண்ட நிறுவனங்கள். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழை மக்கள் வறுமைகோட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

அமைதியை விரும்பும் நாடு: தற்போது உலக அளவில் எங்கு பார்த்தாலும் போர்சூழல் நிலவுகிறது. ரஷ்யா -உக்ரைன்,இஸ்ரேல்-காஸா என ஆங்காங்கே போர்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்த உலகை அழித்துவிடும் ஆற்றல் கொண்ட அணுகுண்டுகளை சில நாடுகள் வைத்துள்ளன. ஆனால், இந்தியா எப்போதும் அமைதியை விரும்பக்கூடிய நாடாகவே இருந்து வருகிறது. உலகில் ஒருபுறம் சில நாடுகளில் செல்வமும், பொருளாதார வளமும் மிதமிஞ்சி காணப்படுகின்றன. மற்றொரு புறம் பசியும், பட்டினியும் நிலவுகிறது. கரோனா தொற்று காலத்தில் உலக நாடுகளுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்கினோம். சிலர் இனம், மதம், மொழியின் பெயரால் நாட்டை துண்டாட நினைக்கிறார்கள். இத்தகைய பிரிவினை போக்குக்கு மாணவர்கள் ஒருபோதும் பலியாகிவிடக்கூடாது. இவ்வாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். விழாவில், தமிழ்நாடு ஹிந்தி சாகித்ய அகாடமியின் தலைவர் பேராசிரியை நிர்மலா எஸ்.மவுரியா,செயலாளர் ஈஸ்வர் கருண், கல்லூரியின் செயலாளர் அசோக்குமார் முந்த்ரா, முதல்வர் எஸ்.சந்தோஷ் பாபு மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

x