மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கே அதிக பயன்: டி.கே.சிவக்குமார் உறுதி


சென்னை: மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் கர்நாடகா மாநிலத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக பயன் கிடைக்கும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனத்தின் பங்களிப்போடு இயங்கி வரும் பயோ-சி.என்.ஜி இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று பார்வையிட்டார். இதன் மூலம் குப்பைகள் எவ்வாறு மேலாண்மை செய்யப்படுகிறது என்று அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் கர்நாடகா மாநிலத்தைவிட தமிழ்நாடு மாநிலத்திற்குத்தான் அதிக பயன் கிடைக்கும். போதியளவில் மழை பெய்து உபரி நீர் திறக்கப்பட்டிருப்பதால், கர்நாடக நீர் திறப்பு குறித்து பேச வேண்டியதில்லை. 2 மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார்'' என்று கூறினார்

x