தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு


சென்னை: தமிழகத்தில் இன்று (செப். 2) முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை 12.30 முதல் 2.30 மணிக்குள் வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில், கலிங்கப்பட்டினத்துக்கு அருகே கரையைக் கடந்தது.

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் செப். 1-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 5 செ.மீ., சின்கோனாவில் 4 செ.மீ., வால்பாறை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 3 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் நெய்வாசல் தென்பாதி, வெட்டிக்காடு, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, அரியலூர் மாவட்டம் திருமானூர், கோவை மாவட்டம் சோலையாறு, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று முதல் 5-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x