பூலித்தேவன் பிறந்தநாள்: நினைவு மாளிகையில் தமிழக அரசு சார்பில் மரியாதை


தென்காசி: பூலித்தேவன் பிறந்தநாள் விழாவையொட்டி, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 309-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெல்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவன் நினைவு மாளிகையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் டாக்டர் சதன் திருமலைக்குமார், .ஈ.ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறும்போது, ''சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், தமிழுக்காக, தமிழ்நாட்டுக்காக பாடுபட்டவர்களுக்கும் உரிய மரியாதையை தமிழக முதல்வர் அளித்து வருகிறார். தியாகிகள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டும்'' என்றார்.

x